ஸ்வாமிமலை - ஸ்ரீ ஸ்வாமிநாத ஸ்வாமி (அறுபடைவீடு)
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் நான்காவது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவத திருவேரகம் எனப்படும் சுவாமிமலை. இங்கு ஸ்வாமிநாத ஸ்வாமியாக முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கிறார்.
ஸ்தல புராணம்: ஸ்ருஷ்டிக்கும் (படைக்கும்) கடவுளான பிரம்மதேவன் ஒருமுறை ஈசனை காண கைலாயம் வந்திருந்தார் அப்போது முருகப்பெருமான் வணங்கியதை கூட கவனிக்காமல் வேறு ஏதோ சிந்தனையில் சென்று விட்டார். படைக்கும் தொழிலில் ஆணவம் கொண்டிருந்த பிரஹ்ம தேவனுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என எண்ணிய முருகப்பெருமான், பிரம்மாவிடம் "ஓம்" என்ற பிரணவத்திற்க்கு பொருள் கேட்க கேள்விக்கு பிரம்மாவால் பதில் சொல்ல தெரியாமல் திகைத்தார். அவரை தலையில் குட்டி, சிறையில் அடைத்தார் முருகப்பெருமான். படைக்கும் கடவுளான பிரஹ்மதேவநே சிறைப்பட்டதால் பிரபஞ்சதில் ஜீவராசிகளின் சிருஷ்டி நின்று விட, வைகுண்டதிலிருந்து பெருமாள் மற்றும் தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர்.
ஈசன் கேட்டுக்கொண்டதினால் பரம்மாவை அவர் விடுதலை செய்தார். பிறகு சிவபெருமான், பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா என்று முருகனிடம் கேட்க முருகப்பெருமானோ ஓ நன்றாகத் தெரியும், உரிய முறையில் கேட்டால் சொல்வேன் என்றார். ஆகவே சிவபெருமான் இந்த சுவாமிமலை தலத்தில் சிஷ்யன் நிலையில் அமர்ந்து, முருகப் பெருமானிடம் பிரணவ உபதேசம் கேட்டார். இவ்வாறு இறைவனான சிவபெருமானுக்கே முருகன் குருநாதனாக ஆனதால், அவரை சுவாமிநாதன் என்றும், பரமகுரு என்றும், தகப்பன்சாமி என்றும் போற்றுகிறோம். அதனாலேயே இந்த தலமும் சுவாமிமலை என்று பெயர் பெற்றுவிட்டது.
சுவாமிமலை இயற்கையான மலை அல்ல. ஏராளமான கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு மாடக்கோவில்தான் இது. இங்கு மூன்றாவது பிரகாரம் மலையடிவாரத்தில் உள்ளது. இரண்டாம் பிரகாரம் கட்டுமலையின் நடுப்பாகத்திலும் முதலாம் பிரகாரம் கட்டுமலையின் உச்சியில் சுவாமிநாதப் பெருமானைச் சுற்றியும் அமைந்துள்ளது. தெற்கு நோக்கிய ராஜகோபுரம் ஐந்து நிலைகள் உடையது. பெரும்பாலும் பக்தர்கள் கிழக்குப்புற மொட்டைக் கோபுரத்தின் வழியாகவே கோவிலுக்குள் நுழைகின்றனர். அவ்வாறு நுழைந்தவுடன் வல்லப கணபதியை தரிசிக்க முடிகிறது. மலைக்கோயிலின் கீழ்த்தளத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், விநாயகர், சோமாஸ்கந்தர், விசுவநாதர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சன்னதிகள் அமைந்துள்ளன.
சுவாமிநாதனை தரிசிக்க நாம் 60 படிகள் மேலே ஏறிச் செல்ல வேண்டும். 60 தமிழ் வருடங்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் இந்த 60 படிகளும் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன. மேல்தளத்தில் முதலில் நமக்குக் காட்சி தருபவர் கண்கொடுத்த கணபதி என்ற விநாயகர் ஆவார். இவர் செட்டி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்குக் கண்பார்வையை அருளியதால் "கண் கொடுத்த கணபதி" என்று பெயர் பெற்றதாக செய்திகள் கூறுகின்றன. இன்றும், இவரை வணங்கும் பக்தர்களுக்கு நல்ல கண் பார்வையை கிடைக்கிறது என்பது பலர் அனுபவ ரீதியாக உணர்ந்த உண்மை.
மூலவர் இத்தலத்தில் சுவாமிநாதன், நான்கரை அடி உயர நின்ற கோலத்தில் காட்சி கம்பீரமாக காட்சித் தருகிறார். வலது கரத்தில் தண்டாயுதம் தரித்து, இடது கரத்தை இடுப்பில் வைத்து, சிரசில் ஊர்த்துவ சிகாமுடியும், மார்பில் பூணூலும் ருத்திராட்சமும் விளங்க கருணாமூர்த்தியாக காட்சித் தருகிறார். முகத்தில் ஞானமும் சாந்தமும் தவழ்வதை கண்குளிர பார்க்க முடிகிறது. மகாமண்டபத்தில் மயிலுக்குப் பதிலாக முருகனுக்கு இந்திரனால் வழங்கப்பட்ட ஐராவதம் என்ற யானை நிற்கிறது. தல விருட்சம் நெல்லி மரம். நெல்லி மரத்தை வடமொழியில் "தாத்ரி" என்பர். அதனால் சுவாமிமலையை "தாத்ரிகிரி" என்றும் குறிப்பிடுகின்றனர். மேலும் சிவகிரி, குருவெற்பு, குருமலை, சுவாமி சைலம் போன்ற பெயர்களும் உண்டு. வடமொழியில் சுவாமிநாதனை "ஞானஸ்கந்தன்" என்று போற்றுகின்றனர்.
சிறப்புக்கள்: அருணகிரிநாதர் 38 திருப்புகழ்ப் பாடல்களை இந்த சுவாமிநாதனுக்கு பாமாலையாகச் சூட்டியுள்ளார். சுவாமிமலையைச் சேர்ந்த கடுக்கண் தியாகராஜ தேசிகர் என்பவர் சுவாமிமலை நவரத்தின மாலை என்ற நூலை இயற்றியுள்ளார். "ஒருதரம் சரவணபவா" என்று தொடங்கும் நவரத்தின மாலையின் மூன்றாவது பாடல் மிகவும் பிரபலமானது.சங்கீத மூர்த்தி ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதர் இயற்றிய, "சுவாமிநாத பரிபாலயாதுமாம்" என்ற நாட்டை ராகக் கிருதியும் மிகவும் பிரபலமானது.