திருச்செந்தூர் - ஸ்ரீ சுப்ரஹ்மன்ய ஸ்வாமி (அறுபடைவீடு)

 

thiruchendurமுருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூரில் இரண்டாம் படைவீடாகும். இத்தலத்தில் முருகப்பெருமான் சூரபத்மன் என்னும் அசுரனை சம்ஹாரம் செய்து சிவபெருமானை ஐந்து லிங்கங்கள் வடிவில் வைத்து வழிப்பட்டார்.

ஸ்தல புராணம்: தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து தோன்றிய முருகப்பெருமான், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை சம்ஹாரம் செய்து ஆட்கொள்ள இங்கு வந்தார். தேவர்களின் குருவான வியாழ பகவான் சூரபத்மனை வதம் செய்ய வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, சூரபத்மனை சம்ஹாரம் செய்தார்.

வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோவில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால். "ஜயந்திநாதர்" என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே செந்தில்நாதர் என மருவியது. தலமும் திருஜெயந்திபுரம் என அழைக்கப்பெற்று, பின்பு திருச்செந்தூர் என மருவியது.

கோவில் அமைப்பு: 150 அடி உயரம் கொண்ட இக்கோவிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்ட பின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சிவபெருமானுக்கு பூஜை செய்தார்.  இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டிய பின்பே, முருகனுக்கு தீபாராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும். இது தவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் பஞ்சலிங்க சன்னதியும் இருக்கிறது. திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைந்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒருநாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும்

சண்முகர் சிலையின் சிறப்பு: திருமலை நாயக்கரின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் டச்சுக்காரர்களும் [உலாந்தகர்] போர்ச்சுக்கீசியர்களும் [பரங்கியர்]அவ்வப்போது ஆதிக்கம் செலுத்தி வந்தனர். திருமலை நாயக்கருக்கு கப்பல் படை இல்லாததும், தலைநகரமான மதுரையிலிருந்து தென்கோடியை அவரது இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் வைக்க இயலாமல் போனதால், கப்பல் வலிமையுடனிருந்த டச்சுக்காரர்களும் போர்ச்சுக்கீசியர்களூம் கடற்கரை பகுதிக்குள் அத்துமீறிக்கொள்ளை அடித்துவிட்டு கடல் வழியாகத் தப்பிச் செல்லும் போக்குடையவர்களாக இருந்தனர். கொற்கைக்குடாவான மன்னார் வளைகுடாவில் விளைந்த முத்துக்கள், சங்குகள், கடற்கரையோரமிருந்த கோயில்களின் பொற்சிலைகள், ஆகியவற்றை அக்கொள்ளையர்கள் கொள்ளையடித்து வந்தனர்.

கி.பி.1635 இல் தூத்துக்குடி போர்ச்சுக்கீசியர்களின் அடக்குமுறைக்கு உள்ளானது. போர்ச்சுக்கீசியர்கள் திருமலை நாயக்கருடன் நட்புடன் இருந்ததால் தன்னுடைய நாட்டில் அடித்த கொள்ளையை திருமலைமன்னர் கண்டு கொள்ளவில்லை. ஏனென்றால் திருமலைக்கும் இராமனாதபுரம் சேதுபதிகளுக்கும் நடைபெற்றப் போரில் போர்ச்சுக்கீசியர்களின் ஆயுத உதவியாலும், படை உதவியாலும் திருமலை வெற்றி பெற்றார். இதனாலேயே கொள்ளையைக் கண்டு கொள்ளாமலிருந்தார். எனவே தென்கடற்கரைப் பகுதி பரதவர்கள் மற்றும் பிற மக்களும் பல இன்னல்களை அனுபவித்தனர். காயல்பட்டினம் துறைமுகமாகவும் அரியமுத்துக்கள் கிடைத்தப் பகுதியாகவுமிருந்தது. அயல்நாட்டுடன் வணிகம் செழித்திருந்தது. டச்சுக்காரர்கள் காயல்பட்டினத்தில் வரி வசூலித்து வந்தனர். கி.பி.1648 இல் போர்ச்சுக்கீசியர்களூக்கு ஆதரவான திருமலை, டச்சுக்காரர்களை காயல்பட்டினத்திலிருந்து வெளியேறச்
செய்தார். இதனால் மிகுந்த அவமானமும் நஷ்டமும் அடைந்த டச்சுக்காரர்கள் திருச்செந்தூருக்குத் தங்களுடைய இருப்பிடத்தை மாற்றியதுடன், அங்கிருந்த அப்பாவி இந்துக்களின் வீடுகளை கொள்ளையிட்டனர். வீடுகளுக்குத் தீயிட்டனர். தங்களுடைய இழப்பிற்காக கட்டாய வரி வசூல் செய்தனர். கடற்கரைக் கோயிலின் பாறைக் குடைவரை எழில்மிகுச் சிற்பங்களை உடைத்து எரிந்தனர். கற்சிற்பங்களை உடைத்தனர். அங்கிருந்த எழில்மிகு ஐம்பொன் சிலைகளையும், சண்முகரின் சிற்பத்தையும், நடராஜ மூர்த்தியின் சிற்பத்தையும், மேலக்கோயில்,வெயிலுகந்தம்மன் கோயில் சிலைகளையும் கணக்கிலடங்காத பொன்நகைகளையும் கொள்ளையடித்துக் கொண்டு வெளியேறப் புறப்பட்டனர். தங்களுடைய தெய்வத்தை களவாடிச் செல்லுவது கண்டு பொறுக்காத உள்ளூர் மக்கள் அனைவரும் தங்கள் கையில் கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு எதிர்த்தனர். வேதங்களோதும் அந்தணர்களாகிய திரிசுதந்திரர்களும் கையில் ஆயுதமேந்திப் போராடினர். திரிசுதந்திரர்கள் உட்பட பலர் உள்ளூர் மக்கள் மாண்டனர். டச்சுக் கொள்ளையர்கள் படகுகள் மூலம் களவாடியப் பொருட்களுடன் இலங்கை நோக்கிப் பயணமானர். திருச்செந்தூரைத் தாண்டுமுன்னே திடீரெனபுயல், மழை தாக்கியது. தெய்வமென்று பாராமல் சிலைகளைத் தூக்கி வந்ததுதான் காரணம் என்பதை உணர்ந்தனர். டச்சுக்காரர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்து விடக் கூடாது என்பதற்காக சண்முகரின் சிலை, நடராஜப்பெருமானின் சிலை ஆகியவற்றை கடலினுள் எறிந்தனர். முருகனின் அற்புதத்தால் புயலும், மழையும் நின்றது. டச்சுக்காரர்கள் திருச்செந்தூர் முருகனின் கோயிலைக் கையெடுத்துக் கும்பிட்டு எஞ்சிய கோடிக்கணக்கான நகைகளுடன் இலங்கை சென்றனர்.

தென்பகுதிக்கு திருமலையின் வரிவசூல் செய்யும் அலுவலராகப் பணியாற்றிய வடமலையப்பப்பிள்ளை தூங்கும் போது முருகப்பெருமான் கனவில் காட்சி தந்து கடலினுள் தாமிருக்கும் இடத்தின் மீது ஒரு எலுமிச்சம்பழம் மிதந்து கொண்டிருக்கும் வானத்தில் கருடன் ஒன்று வட்டமிட்டுக் கொண்டிருக்கும் என்று கூறி மறைந்தார். தம்முடைய பணியாளர்கள், நண்பர்கள், கடலில் முத்துக் குளிக்கும் மீனவர்கள் ஆகியோரை அழைத்துக்கொண்டு கடலுக்குள் படகில் சென்றார். சிறிது தூரம் சென்றவுடன் முருகன் கனவில் கூறியது போல வானத்தில் ஒரு கருடன் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அங்கே எலுமிச்சம்பழம் ஒன்றும் மிதந்தது. அந்த இடத்தில் குதித்தனர், என்னே அற்புதம் சண்முகர் சிலையும், நடராஜர் சிலையும் கிடைத்தது. மக்கள் மகிழ்ச்சியில் திழைத்தனர். உடைந்த மூலவர் சிலை புதிதாகச் செய்யப்பெற்று பிரதிஷ்டை செய்யப் பெற்றது. குடமுழுக்கு நடைபெற்றது. கடலினுள் டச்சுக்காரர்களைச் சிலையைப் போடவைத்ததும், சிலை இருந்த இடத்தைக் காட்டியதும் செந்திலாண்டவனின் அற்புதங்களுள் சிறப்பாகும்.   

நக்கீரனுக்கு அருள்புரிந்த முருகன்: முக்கண்ணனான சிவபெருமானோடு எற்பட்ட வாக்குவாதத்தினால், பெரு நோயான குஷ்டத்தால் அவதிப்பட்ட நக்கீரர் தினமும் சிவனைத் தவறாமல் வழிபட்டு வருகின்றார். அவ்வயம், கைலாசம் சென்று சிவனைத் தரிசித்தேத் தீருவது என்ற தீர்மானத்தில் செல்லும்போது திருப்பரங்குன்றத்தில் குளமொன்றினருகில் அமர்ந்து வழிபடத் தொடங்கினார் அப்போது அங்கிருந்த கல்முகி என்ற பூதம் அவரைச் சோதிக்க அரசமரமொன்றிலிருந்து ஒரு அரச இலையை விழச் செய்தது. அவ்விலையானது கீழே இருந்த தண்ணீரில் விழுந்து,அதன் ஒரு பாதி மீனாகவும் மறு பாதி பறவையாகவும் மாறியது .இக்காட்சியைக் கண்ட நக்கீரர் மெய்மறந்து நின்றார்.சிவ பூஜை செய்ய மறந்த நக்கீரனை கல்முகி பூதம் உடனே கைது செய்து திருச்சீரலைவாயில் [திருச்செந்தூர்] உள்ள குகையொன்றில் சிறை வைத்தது.தன்னை விடுவிக்க அத்தனை தெய்வங்களையும் போற்றித்துதித்தும் பயனில்லாததால் ,தம்மை உற்ற தெய்வம் கலியுகத்தின் கண் கண்ட தெய்வமான கந்தப் பெருமானே என்பதை உணர்ந்து திருமுருகாற்றுப்படை என்ற நூலை பாடினார்.நிறைவாக,

"உன்னைஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின் செல்லேன் பன்னிருகைக்
கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா செந்தில் வாழ்வே"

என்று மனமுருகப் பாடியதும் சக்தி வேலாயுதத்துடன் தோன்றிய முருகன் நக்கீரரை மீட்டார்.அவருடன் சிறை வைக்கப்பட்டிருந்த அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.முருகனின் திருவிளையாடலால் தமிழின் பெருமையை ஆறுபடை வீடுகளின் சிறப்பை உலகிற்கு எடுத்தியம்பும் அற்புதமான சங்க இலக்கியம் தமிழனுக்குக் கிடைத்தது.

ஆதிசங்கராச்சாரியரின் நோய் தீர்த்த செந்தூரான் கேரளாவில் காலடி என்ற சிற்றூரில் அவதரித்தவர் ஆதிசங்கரர். அஷ்டமாசித்திகள் கைவரப் பெற்ற அவர் தன்னுடைய தாயார் தண்ணீரெடுக்கச் செல்லும் ஆறு வெகு தூரத்தில் உள்ளது என்பதற்காக அவ்ஆற்றையே தன்னுடைய வீட்டிற்கு அருகில் திரும்பி ஓடச்செய்த ஆற்றல் மிக்கவர். மிகப்பெரிய சித்தரான அவரை காச நோய் தொற்றிக்கொண்டது. அதிலிருந்து மீள் முடியாமல் துன்பமடைந்தார்.சிவபெருமானை நோக்கித் தவமிருந்தார். அப்போது தோன்றிய சிவன்,அசுரனை சம்காரம் செய்த அற்புதத் தலமான திருச்செந்தூர் செல்வாய் அங்கு எம்முடைய அம்சமாக வீற்றிருக்கும் ஆறுமுகப்பெருமானைப் பணி ; உன்னுடையநோயைக் குணமாக்கும் ஆற்றல் கலியுகக் கந்தனிடமே உள்ளது என்றார்.ஆகாய வழியாக செந்தூர் வந்த சங்கரர், முருகப்பெருமானை குகைக் குடைவறையில் ஆதிசேஷன்[பாம்பு] முருகனின் பாதங்களைப் பூஜை செய்யும் அற்புதக் காட்சியைக் கண்டார்.தீராத தன்னுடைய வயிற்றுவலியைத் தீர்த்து வைத்திட முருகனிடம் வேண்டி கோயிலில் வழங்கிய விபூதியையும்,பன்னீர் இலையையும் உண்டார்.என்னே அற்புதம் அடுத்த நொடியில் அவரது நோய் அகன்றது.உடனே முருகனைப் போற்றி சுப்பிரமணிய புஜங்கம்[புஜங்கம் என்றால் பாம்பு என்று அர்த்தம்] என்ற நூலைப் பாடினார்.’’கண்டால் நின் இலை நீறு கைகால்வலிப்புக்-காசம் கயம்குட்ட முதலாய நோயும்-விண்டோடு மேபூத பைசாசம் யாவும்-வினையாவுமே செந்தி அமர்தேவ தேவே’’என்ற பாடலுடன் சிறப்பு வாய்ந்தது.


அருணகிரிநாதருக்கு வழி காட்டிய முருகன்: திருவண்ணாமலையில் பிறந்து சராசரி மனிதனாக சிற்றின்பத்தில் வீழ்ந்து நோய்வாய்ப்பட்ட அருணகிரிநாதர் ,மனமுடைந்து திருவண்ணாமலைக் கோபுரத்தில் ஏறி அதிலிருந்து கீழே விழ முருகப்பெருமான் அவரைத்தாங்கி பிடித்தார். முருகனை நாடி திருப்பரங்குன்றம் வந்தார். மனமுருக வழிபட்ட பின்பு திருச்செந்தூர் புறப்பட்டார். வழிஎல்லாம் ஒரே காடாக இருந்தபடியால் அருணகிரி வழி தெரியாமல் திகைத்து நின்றார். அந்நேரம் மயில் ஒன்று காட்சி தந்து, வழிகாட்டி திருச்செந்தூருக்கு அழைத்து வந்தது. திருச்செந்தூரில் முருகனில் சிவனைக் கண்ட அருணகிரியார் ’கயிலை மலையனைய செந்தில்’ என்று சிறப்பித்துப் பாடினார். செந்திலாண்டவனை தம்முடைய தந்தையைப் போல ஆடிக் காட்ட அழைத்தார். முருகப்பெருமானும் திருத்தாண்டவம் ஆடிக்காட்டினார். இக்காட்சியை தற்போது கோயிலில் நடைபெறும் ஏழாம் திருவிழா நாளில் ‘சிவப்புச் சாத்தி’செய்யப்படும் நாளில் ஆறுமுகப்பெருமான் எழுந்தருளும் சப்பரத்தின் பின்பகுதியில் முருகப் பெருமான் நடராசர் போல ஆடல் காட்சி தருகிறார்.

குமரகுருபரருக்கு அருளிய முருகப்பெருமான் ஸ்ரீவைகுண்டத்தில் சைவவேளாளர் மரபைச் சேர்ந்த சண்முகசிகாமணி கவிராயருக்கும் சிவகாம சுந்தரி அம்பாளுக்கும் பிறந்த குமரகுருபரர் தமது மூன்று வயதளவிலும் வாய் பேசாமல் ஊமை போலிருந்தார்.அது கண்ட பெற்றோர் பெருந்துயரடைந்தனர்.இதற்கிடையில் பிறந்த இரண்டாவது குழந்தை வாய் பேசியது. இதனால் மேலும் மனம் வருந்தினர். அய்ந்து வயதானது குமரகுருபரனுக்கு, ஊமைக் குழந்தையை தூக்கிக்கொண்டு திருச்செந்தூர் முருகனின் கோயிலுக்கு வந்தனர்.முருகனின் சன்னிதி முன்பு குழந்தைக் கிடத்தினர் 40 நாட்கள் விரதமிருந்தனர்,தினமும் மனமுருக வேண்டிக்கொண்டனர்.யாதொரு பலனும் தெரியவில்லை. மனமுடைந்த தம்பதியர் நாளை ஒரு நாள் பார்ப்போம் முருகன் அருளீயாவிடில் நாமிருவரும் உயிரை மாய்த்துக் கொள்வோம் என்ற மனமுறுதியைக் கொண்டனர்.காலையில் கடலில் நீராடி கொடிமரத்தடியில் மகனைக் கிடத்தி விட்டு முருகனைத் தரிசிக்கச் சென்றனர். அந்நேரம் முருகன் கோயில் அர்ச்சகர் வடிவில் வந்து குமரகுருபரன் முன்பு ஒரு வெண்டாமரைப் பூவொன்றினைக் காட்டி இது என்ன என்று கேட்டார்.அது நாள் வரையிலும் பேசாமலிருந்த ஊமைக் குழந்தை ’பூ’ என்றது. சைவம் தழைக்கப் பாடு என்று முருகன் கட்டளையிட்டு மறைந்தார். பூமேவு செங்கமலப் புத்தேளும் என்ற பாடல் அடியை முதலாகக் கொண்டு கந்தர் கலி வெண்பா நூலைப் பாடி முருகனின் பெருமைக்குப் பெருமைச் சேர்த்தார். ஊமையாய் இருந்தவனை கவி பாடச் செய்து குமரி முதல் காசி வரை பாடலால் உலகம் போற்றச் செய்த அற்புதம் செய்தார் நமது செந்திலாண்டவர்.

 

Go to top
X

Sivachariyar.com

Please don't copy our site!